
கோப்புப்படம்
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதையும் படிக்க | நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்
இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இப்படியான வழக்கு தொடர்ந்ததற்கு அபராதம் விதிக்கப் போகிறோம் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்: மத்திய அமைச்சர் அமித் ஷா