பாஜக ஒரு முதலையைப் போன்றது எனவும், அவர்களுடன் இருப்பவர்களை அது விழுங்கிவிடும் எனவும் சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவிடமிருந்து விலகியிருக்க முடிவு செய்தார் எனவும் தெரிவித்தார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: புதிய நாடாளுமன்றக் கட்டடம் - புகைப்படங்கள்!
இது குறித்து அவர் பேசியதாவது: சிவசேனை பாஜகவிடமிருந்து விலகியே உள்ளது. பாஜக சிவசேனையை அழிக்க நினைக்கிறது. பாஜக ஒரு முதலை அல்லது மலைப்பாம்பு போன்றது. அவர்களோடு சேர்ந்து பயணிப்பவர்கள் அவர்களால் விழுங்கப்படுவார்கள். சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே பாஜகவிடமிருந்து விலகியிருப்பதற்கான காரணத்தை புரிந்து கொண்டிருப்பார்கள். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. பாஜக அவர்களின் வார்த்தைகளை காப்பாற்றவில்லை. சிவசேனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் நிதியளிப்பதில்லை. மேலும், அவர்கள் சிவசேனை தலைவர்களை அவமதிக்க முயற்சிக்கிறார்கள். கட்சியின் பெயரினைக் காப்பாற்ற உத்தவ் தாக்கரே பாஜகவிடமிருந்து விலகியிருப்பது என்ற முடிவை எடுத்தார் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சிவசேனை விலகி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் ஒன்று சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.