மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மிகக் குறைந்த மாத சம்பளம் பெறும் பிகார் மக்கள்!

பிகாரில் வாழும் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மிகக்குறைந்த மாத சம்பளத்தைப் பெறுவதாக மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :7 நவம்பர் 2023, 11:58 am

பீகாரில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், மாத சம்பளமாக வெறும் ரூ.6,000 மட்டுமே பெறுவதாகவும் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை உயர்சாதிப்பிரிவில் கணிசமான அளவிலும் தாழ்த்தப்பட்ட மக்களில் மிக அதிக அளவிலும் இருப்பதாக அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

பிகார் நிதித்துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி தாக்கல் செய்த இந்த அறிக்கையின்படி, பிகாரில் வாழும் 2.97 கோடி குடும்பங்களில் 94 லட்சம் குடும்பம் அதாவது 34.13 சதவீத குடும்பத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். 

குறிப்பாக, பிகாரைச் சேர்ந்த 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பிற  மாநிலங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தேடியும், நல்ல கல்விக்காகவும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் 17 லட்சம் மக்கள் நல்ல விளைநிலங்களைத் தேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 5.52 லட்சம் மக்கள் பிற மாநிலங்களுக்கும் 27,000 பேர் வெளிநாடுகளுக்கு நல்ல கல்விக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பின் ஆரம்பகட்ட முடிவுகள் கடந்த அக்டோபர் 2 அன்று வெளியிடப்பட்டன. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயக்கம் காட்டியது. எனினும், பீகார் முதல்வர் நித்திஷ் குமார் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

இந்த ஆரம்பக் கட்ட கணக்கெடுப்பில், மொத்த பிகார் மக்கள்தொகையில் 60% மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. மேலும், உயர்சாதியின மக்கள் 10% சதவீதம் மட்டுமே வாழ்வதாகக் கண்டறியப்படுள்ளது. 

உயர்சாதியினரிடையே ஏழ்மையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தை விட அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வசதி படைத்த உயர்சாதியின மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. 

பிகாரின் மிகப்பெரிய நில உடைமை கொண்ட சமூகமாகக் கருதப்படும் புமிஹார் வகுப்பினரில் 27.58% பேர் வறுமையில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சமூகம் 1990க்கு முன்புவரை மாநில ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திவந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.