Enable Javscript for better performance
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

    By DIN  |   Published On : 20th November 2023 01:05 PM  |   Last Updated : 20th November 2023 01:07 PM  |  அ+அ அ-  |  

    kapil_dev

     

    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்றது. இதனை நேரில் காண்பதற்கு வராதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்து கபில்தேவ் கூறியதாவது, “போட்டியை நடத்தியவர்கள் என்னை அழைக்கவில்லை. அதனால் நான் நேரில் வரவில்லை. 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் அனைவருமே இந்தப் போட்டியை நேரில் காணவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் கடைசிவரை எங்களுக்கு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அவர்களுடைய கடினமான பணிகளுக்கிடையில் ஒருவேளை மறந்திருக்கலாம்.” என்று கூறினார். 

    இதையும் படிக்க: 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

    இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் தன்னுடைய கருத்தை தைரியமாக வெளியில் கூறுபவர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அதனால் அவரை அழைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.” என்று கூறியுள்ளார். 

    மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேத்திவார், “எல்லாவற்றிலும் அரசியல் இருப்பதுபோல, கபில்தேவ் அழைக்கப்படாததற்கு பின்னும் அரசியல் இருக்கிறது.” என்று கூறினார். 

    இதுகுறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் வலியுறுத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: “இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதந்த கபில்தேவ் இறுதிப்போட்டிக்கு அழைக்கப்படவில்லை.  இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அவமதிக்கப்பட்டுள்ளார். இது நாட்டுக்கே அவமானம். நாட்டின் ஆளுங்கட்சி கொடுத்த அரசியல் அழுத்தத்தால் அவரை அழைக்கவில்லையா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி விளக்கமளிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

    இதுவரை நடைபெற்ற 13 உலகக்கோப்பைத் தொடர்களில் 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டுமுறை மட்டுமே இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp