உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் சிறுத்தை தாக்கியதால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சோஹெல்வா காட்டுப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியான ரித்தேஷ் என்ற சிறுவன், தனது தாத்தாவுடன் காட்டின் விளிம்புப்பகுதிக்குச் சென்றபோது புதர்களுக்குள் ஒளிந்திருந்த சிறுத்தை ஒன்று இருவரையும் தாக்கியுள்ளது. பின்னர் அந்தச் சிறுவனை வாயால் கவ்வி இழுத்து சென்றது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டுக் கிராம மக்கள் வருவதற்குள் சிறுத்தைக் காட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டது.
பின்னர், சிறுவனின் உடல் காட்டுப்பகுதியில் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது எனக் கோட்ட வன அலுவலர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
சிறுவனது உடலில் உடற்கூராய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளுக்குப் பின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான கூண்டுகள் நிறுவப்பட்டுள்ளன எனவும் மாவட்ட நீதிபதி அரவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.