கோழிக்கோடு: தெலங்கானா தேர்தலுக்கான தீவிர பிரச்சாரம் செவ்வாய்க்கிழமையோடு முடிவடைந்த நிலையில், பரப்புரையின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மொழிபெயர்க்க வந்திருந்த நபரைக் குறிப்பிட்டு தெலங்கானாவில் தனக்கு நடைபெற்ற நிகழ்வைத் தெரிவித்தார்.
ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியபோது, அவர் பேசுவதைத் தெலுங்கில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் அவர் சொல்லாததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததாராம்.
கொஞ்ச நேரத்தில் இதனைக் கவனித்த ராகுல்காந்தி, தனது வார்த்தைகளைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளார். அவர் 5 வார்த்தை ஹிந்தியில் பேசினால் தெலுங்கில் 7 வார்த்தைகள் வரை வரலாம் என யோசித்தவருக்கு மொழிபெயர்ப்பாளர் 20 முதல் 25 வார்த்தைகள் பேசியது அதிர்ச்சியளித்துள்ளது.
மேலும், தான் மோசமாக பேசும்போது கூட்டம் ஆர்ப்பரித்ததாகவும் முக்கியமான விஷயத்தைப் பேசும்போது அமைதி காத்ததாகவும் குறிப்பிட்டு மொழிபெயர்ப்பாளர் பணி என்பது ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபம் வந்தபோதும் அமைதி காத்ததாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, கேரளாவில் அப்படியொரு சம்பவம் நடைபெறாது என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தெலங்கானா மாநிலத்தில் வாக்குப் பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெறவிருக்கிறது.