சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி ஒருமனதாக ஆதரிக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தலைமை நிர்வாகிகள், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவது என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி ஒருமனதாக ஆதரிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்துகின்றன. இதற்கு செயற்குழுவும் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஆற்றல் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசால் நடத்த முடியவில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து நடத்திக்கொள்ளும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்திய பாஜக ஆட்சி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டும். காங்கிரஸில் 4 முதல்வர்களில் 3 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் பாஜகவின் 10 முதல்வர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பாஜகவில் உள்ள ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு முதல்வரும் இந்த தேர்தலுக்குப் பிறகு முதல்வராக நீடிக்க மாட்டார்கள்.
ஓபிசி மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக என்ன செய்துள்ளார்? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பட்டியல், பழங்குடியினர், ஓபிசி பிரிவு மக்களை தவறாக வழிநடத்தவே பிரதமர் மோடி செயல்படுகிறார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.