நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்: ஒரே பாலின திருமண வழக்கில் தீர்ப்பு

நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்  என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்: ஒரே பாலின திருமண வழக்கில் தீர்ப்பு

புது தில்லி: சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்  என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறானது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது தேசத்தை சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்துக்குக் கொண்டு சென்றுவிடும் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஒரே பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது நான்கு விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன  அமர்வு வழங்கவிருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரிய மனு மீதான தீா்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை வாசிக்கும்முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நான்கு நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கவிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்ததாகவும், நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில், சட்டத்தின் சரத்துகளைக் கையாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ சட்டப்பேரவைகளையோ கட்டாயப்படுத்த முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்ட பல விஷயங்களை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சதி, குழந்தை திருமணம் போன்ற பல விஷயங்களை இன்று மறுக்கிறோம்.

சிறப்புத் திருமண சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனறு கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு  தெரிவித்துள்ளது.
 
தன்பாலின உறவு என்பது நகர்புறறத்தைச் சேர்ந்தது என்ற கருத்து உண்மையல்ல என்றும் அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியிலிருந்து தொடா்ச்சியாக 10 நாள்கள் விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமைலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தீா்ப்பை கடந்த மே 11-ஆம் தேதி ஒத்திவைத்தது.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ‘ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது, தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘ஒரே பாலினத்தவா்களின் உண்மையான மனிதாபிமான பிரச்னைகளுக்குத் தீா்வு காண மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com