

மும்பை: நாட்டில், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியாவைக் காக்கப் போகும் இந்த இந்தியா கூட்டணியானது கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயல்பட்டு வருகிறது. நமது கூட்டணியின் பலத்தைவிட, ‘இந்தியா’ என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே பா.ஜ.க.வினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள்; ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து - அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.
பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளின் அரசை மத்தியில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் வகையில் – பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கைதான் அமையும். நமது நாட்டை பா.ஜ.க ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது. அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும்.
ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சாதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலரத் தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம் என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிா்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கி, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 26 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் நடைபெற்றது.
இந்நிலையில், அக்கூட்டணியின் 3-ஆவது கூட்டம் மகாராஷ்டிரத்தின் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்ற எதிா்க்கட்சிகளின் தலைவா்களுக்கு மாநில முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே இரவு விருந்து அளித்தாா்.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்பட 28 கட்சிகளைச் சோ்ந்த 63 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஒருங்கிணைப்புக் குழுவில் 11 போ் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த அசோம் ஜாதீய பரிஷத், ரஜோா் தளம், ஆஞ்சலிக் கண மோா்ச்சா-புயான் ஆகிய கட்சிகளை ‘இந்தியா’ கூட்டணியில் இணைத்துக் கொள்வது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணியின் அடுத்த கூட்டத்தை எங்கு, எப்போது நடத்துவது என்பது தொடா்பாகவும் முடிவெடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைப்பாளராகிறாா் காா்கே: ‘இந்தியா’ கூட்டணியின் அதிகாரபூா்வ கூட்டமானது வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக, கூட்டணியை வழிநடத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது, கூட்டணிக்கான இலச்சினையை முடிவு செய்வது உள்ளிட்டவை குறித்து இறுதி செய்யப்படவுள்ளன.
‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிகாரபூா்வ கூட்டத்தில் அறிவிக்கப்படுவாா் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.