திறன் மேம்பாட்டு நிறுவன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாகக் கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது.
இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் மாநில சிஐடி(குற்ற புலனாய்வுத் துறை) போலீஸார் கோரிக்கைக்கு ஏற்ப, சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் இன்று(சனிக்கிழமை) விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்றும் நாளையும்(சனி, ஞாயிறு) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறுகிறது.
ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் தனது வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்க சந்திரபாபு நாயுடுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை விடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது.