

ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் இங்கு வந்து பயில்கின்றனர்.
இந்நிலையில் சமீபமாக இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. இதனால் சில வாரங்களுக்கு அங்கு நீட் பயிற்சி தேர்வுகள்கூட நடத்தக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் சில நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கோட்டா நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். முகம்மது தன்வீர் என்ற 20 வயது மாணவர் நேற்று(புதன்கிழமை) தற்கொலை செய்துகொண்டார்.
இவர் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் கோட்டா நகரில் தங்கி பயின்று வந்தார். இவரது தந்தை ஆசிரியர். சகோதரியும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை அங்கு பயின்ற 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.