புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனை தொடர்ந்து நிராகரித்து நேரில் ஆஜராக மறுத்து வந்த தில்லி முதல்வர் கேஜரிவாலின் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 21-ஆம் தேதி சோதனைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரின் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள திகார் சிறையில் சிறை எண் 2-இல் தனியாக கேஜரிவாலை மட்டும் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
ஏற்கெனவே கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதா ஆகியோரும் திகார் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் சிங் சில நாள்களுக்கு முன்னதாகதான் சிறை எண் 5-க்கு மாற்றப்பட்டார்.
தில்லி முதல்வராக இன்னும் கேஜரிவால் தொடர்ந்து வரும் நிலையில், அவர் ராஜிநாமா செய்வாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.