தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் நேரில் ஆஜராவதைத் தவிர்த்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி கேஜரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை காவலில் இருந்த கேஜரிவால் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கேஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்த நிலையில், கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கலால் கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
தில்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்வாரா? இல்லை சிறையில் இருந்தபடியே முதல்வர் பணியைத் தொடருவாரா?
அரவிந்த் கேஜரிவால் பதவியைத் துறந்தால் அடுத்த முதல்வராகப் பதவியேற்கப்போவது யார்?
சிறையிலிருந்தபடியே முதல்வர் பணிகளைத் தொடர சட்டத்தில் இடம் உள்ளதா? என்றவாறு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அரவிந்த் கேஜரிவால் என்ன செய்யப்போகிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.