கேஜரிவால் திகார் சிறைக்குச் செல்வது முதல்முறையல்ல!

கேஜரிவால் திகார் சிறைக்குச் செல்வது முதல்முறையல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கேஜரிவால்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கேஜரிவால்ANI

புது தில்லி: தில்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் திகார் சிறைக்குச் செல்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே அவர் இரண்டு முறை இதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புது தில்லி முதல்வராக பதவியேற்ற பிறகு அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுபான (கலால்) கொள்கை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் கேஜரிவால் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். விசாரணைக்கு கேஜரிவால் ‘முற்றிலும் ஒத்துழைக்கவில்லை’ என்று கூறி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அமலாக்கத் துறை கோரியது. இதையடுத்து, கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், அவர் ஏற்கனவே இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முறையாக அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். அன்னா ஹசாரேவுடன் லோக் பாலுக்காகப் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார். அப்போது, ஏழு நாள்கள் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இரண்டாவது முறையாக 2014ஆம் ஆண்டு திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார் அரவிந்த் கேஜரிவால். இந்த முறை, அவதூறு வழக்குக்காக அவர் கைது செய்யப்படுகிறார். திருடன் என்று பாஜக தலைவர் நிதின் கட்கரியை அழைத்ததற்காக, அவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நீதிமன்றத்தை நாடி, சிறைவாசத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங், முன்பு சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டாா். அண்மையில் சிறை எண் 5-க்கு அவா் மாற்றப்பட்டாா்.

இதே வழக்கில் சிறையில் உள்ள தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சிறை எண் 1, பிஆா்எஸ் தலைவா் கே.கவிதா பெண்கள் சிறை எண் 6 ஆகியவற்றில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com