ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
தில்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதனை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடா்ந்து முன்னாள் கலால் துறை அமைச்சரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோரின் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சஞ்சய் சிங் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ வாதாடினர்.
சஞ்சய் சிங் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், “சஞ்சய் சிங் வழக்கில் பணம் எதுவும் கைப்பற்றாத நிலையில், 6 மாதங்களாக அவரை சிறையில் வைத்துள்ளீர்கள், அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து உணவு இடைவெளிக்கு பிறகு தெரிவிக்க வேண்டும்.” என்று அமலாக்கத்துறை தரப்புக்கு உத்தரவிட்டனர்.
பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியவுடன், சஞ்சய் சிங் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதே கலால் கொள்கை வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ கவிதா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.