வயநாடு மக்களுடன் தான் எப்போதும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சாலை மார்க்கமாகப் பேரணியாக வந்த ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு அமோக வரவேற்பு அளித்தனர். அப்போது ராகுல் காந்தி மக்களுடன் பேசினார்.
"வயநாடு தனது வீடு" என்றும், "மக்களே தனது குடும்பம்" அதன் அழகிய வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் தனது "வழிபாட்டு ஒளி" என்றும் அவர் கூறினார்.
வயநாடு மக்களின் அசைக்கமுடியாத ஆதரவிற்காக நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நியாயத்தின் புதிய சகாப்தத்தில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, உங்கள் ஒவ்வொருவருக்கும் சேவை செய்வதில் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்.
வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் மற்றும் சிபிஐ தலைவர் அன்னி ராஜா ஆகியோரை எதிர்த்து ராகுல் போட்டியிடுகிறார்.
கடந்த 2019ல் இதே தொகுதியில் மொத்தம் 10,92,197 வாக்குகளில் 7,06,367 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். போட்டியாளரான சிபிஐயின் பிபி சுனீர் 2,74,597 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
கேரளத்தில் இந்தாண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறவுள்ளது.