கரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் 100 மடங்கு மிக மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அது பாதித்தால், பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸின் உருமாறிய எச்5என்1 படிமங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பறவைக் காய்ச்சலின் உருமாறிய எச்5என்1 வகை திரிபு குறித்து ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் நடந்த மாநாட்டின் போது கவலைகளை முன்வைத்தனர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட டேப்லாய்டு டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, வைரஸ் உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான வாசலை நெருங்கக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மிக முன்னணி ஆராய்ச்சியாளரான டாக்டர். சுரேஷ் குச்சிப்புடி கூறுகையில், எச்5என்1 திரிபானது உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தொற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது. இவைகள் மனிதர்கள் உள்பட பாலூட்டிகள் வழியாக மிகப்பெரிய அளவில் பரவும் என்றும், மிகப்பெரிய தொற்றுநோயாக உருமாரும் சாத்தியக்கூறு உள்ள திரிபாகவே இது பார்க்கப்படுகிறது என்கிறார்.
நாங்கள் உண்மையில் இன்னும் உருவாகாத ஒரு வைரஸைப் பற்றி பேசவில்லை, உலகளவில் ஏற்கனவே இருக்கும் ஒரு வைரஸைப் பற்றி பேசுகிறோம், ஏற்கனவே பாலூட்டிகளின் உடலைத் தாக்கி, பரவிக்கொண்டிருக்கிறது. எனவே நாம் தயாராக இருக்க வேண்டிய நேரம் இது" என்று அவர் கூறினார்.
கனடாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஜான் ஃபுல்டன் கூறுகையில், இந்த தரவுகளை முன்மொழிந்து பேசுகையில், மிகத் தீவிர தொற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் ஆற்றல் எச்5என்1 திரிவுக்கு உள்ளதாகவும், இது கரோனா வைரஸைக் காட்டிலும் மிக மோசமான உயிர்க்கொல்லியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்க்க கரோனா வைரஸைக் காட்டிலும் 100 மடங்கு மோசமானதாகத் தெரிகிறது. இது மேலும் சில திரிபுகளைக் கண்டால், மிகப் பயங்கரமான பலி எண்ணிக்கைகளை ஏற்படுத்தலாம் என்கிறார்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து, எச்5என்1 வகை பறவைக்காயச்சல் வைரஸ் பாதித்தவர்களில் ஒவ்வொரு 100 நபர்களுக்கும் 50 பேர் பலியானதாகவும், அதாவது ஒட்டுமொத்தமாக 887 பேருக்கு பாதித்ததில் 462 பேர் பலியானதாக தரவுகளை வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது வரை கரோனா பாதித்தவர்களில் மரணமடையும் விகிதம் 0.1 சதவீதமாகவே உள்ளது. இந்த வைரஸ் பரவியபோது மரண விகிதம் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.