முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அவதிக்கும் வகையில் பேசியதற்காக சந்திரபாபு நாயுடுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திரத்தின் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அரக்கன், விலங்கு, திருடன் போன்ற அவதூறான சொற்களைப் பயன்படுத்திப் பேசினார்.
இதையடுத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதற்கான ஆய்வு செய்யப்பட்டதில் தேர்தல் விதிகளை மீறியதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இதுதொடர்பாக 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.