முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமர்சித்தது தொடர்பாக அம்மாநில தேர்தல் ஆணையம் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திரத்தில் மே 13-இல் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனை ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இந்தக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜன சேனை கட்சி 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.
எனினும், இத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி காணப்படுகிறது. கடந்த 31ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை திருடன், அரக்கன் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்ச்சித்திருக்கிறார்.
இதுதொடர்பாகஆந்திர மாநில தேர்தல் ஆணையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத்தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு, அம்மாநில தேர்தல் ஆணையம் சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.