உ.பி.யில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள்!
நமிதா பாஜ்பாய்
உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க ராஜபுத்திர சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக வேட்பாளராக ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த ஒருவர்கூட அறிவிக்கப்படாதது அந்த சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதவராக கடந்த சனிக்கிழமை சஹாரன்பூரிலும், காசியாபாத்திலும் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சஹாரன்பூர் மாவட்டம் நானாவுடா பகுதியில் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், தில்லி, உத்தரகண்ட், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர்களை ஒன்றிணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்த சமூகத்தின் தலைவர் தாக்கூர் பூரன் சிங் கூட்டத்தில் பேசுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்கும் ஆற்றலும் திறனுமுடைய ஒருவருக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பாஜகவுக்கு பல ஆண்டுகளாக ஆதரவளித்த ராஜபுத்திர சமூகத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், இதற்கு அவர்கள் பதிலளித்தாக வேண்டும் என்றும் அவர் பேசினார்.
கைரானா மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீபால் ராணாவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பாஜகவில் ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற அதிருப்தி பல ஆண்டுகளாகவே உள்ளது. இதேபோன்ற கூட்டத்தை காசியாபாத்தில் சில நாள்களுக்கு முன்பு நடத்திய சமூகத்தினர், வி.கே.சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இருப்பினும், காசியாபத்தில் பிரதமர் மோடியின் பேரணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் வி.கே.சிங்கும் கலந்து கொண்டிருந்தார்.
பாஜகவுக்கு எதிரான அடுத்த கூட்டத்தை வருகின்ற 16-ஆம் தேதி சார்தனா பகுதியில் நடத்த ராஜபுத்திர சமூகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.