பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி சென்னை தியாகராய நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பட்டு வேட்டி, சட்டை அணிந்து வாகனப் பேரணையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
பிரதமர் மோடியுடன் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் வாகனத்தில் உடன் உள்ளனர்.
சாலையில் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் சூழ்ந்து பூக்களைத் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர்.
தியாகராய நகரில் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணி நடைபெறுகிறது. சாலையில் இருபுறங்களிலும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடத்தப்படுகின்றன.
தென்சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாலார் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதையும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
பிரதமா் மோடி காா் செல்லும் சாலையில் ஐந்தடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் தங்கும் கிண்டி ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். நாளை காலை வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.