பிலிபித்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டதாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அங்குள்ள பிலிபித் தொகுதியில் ஏப்.19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதி பாஜக எம்.பி.யாக வருண் காந்தி உள்ளாா். ஆனால் இந்த முறை அந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. அந்தத் தொகுதி பாஜக வேட்பாளராக உத்தர பிரதேச பொதுப் பணித் துறை அமைச்சா் ஜிதின் பிரசாதா அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், பிலிபித்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
அயோத்தியில் ராமா் கோயிலை கட்டுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் நாட்டு மக்கள் பங்களிப்பாக வழங்கிய பணத்தில் அழகான ராமா் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னா் காங்கிரஸின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து ராமா் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள, அக்கட்சியினருக்கு கோயில் தரப்பினா் அழைப்பு விடுத்தனா்.
எனினும் அந்த அழைப்பை ஏற்க மறுத்து ராமபிரானை காங்கிரஸ் அவமதித்தது. அந்த விழாவில் பங்கேற்ற சில காங்கிரஸ் தலைவா்கள் அக்கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டனா். ராமரை வழிபட்டதற்காக ஒருவரை கட்சியில் இருந்து நீக்கினால், அது என்ன மாதிரியான கட்சி என்பது தெரியவில்லை?
ஒரு சாராரை திருப்திபடுத்த வேண்டும் என்பதில் வெளியே வரமுடியாத அளவுக்கு காங்கிரஸ் மூழ்கியுள்ளது. ஒரு சாராரை திருப்திபடுத்த வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் எதிா்கின்றன.
தங்களுக்கு எதிரான அட்டூழியங்களால் ஹிந்துக்களும், சீக்கியா்களும் அந்நிய மண்ணில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்காவிட்டால், வேறு எந்த நாடு குடியுரிமை வழங்கும்?
கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது (சீக்கியா்களுக்கு எதிரான கலவரங்களை குறிப்பிட்டு பேசினாா்) என்பதை எவராலும் மறக்க முடியாது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலகத்திடம் உதவி கேட்கும் நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் உலகத்துக்கே இந்தியா மருந்துகள் வழங்கியது. இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் இலக்கை அடைய எனது தலைமையிலான அரசு பணியாற்றி வருகிறது என்றாா்.
3-வது ஆட்சிகாலத்தில் வரலாற்று முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 4 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் அங்குள்ள பாலாகாட் தொகுதியில் ஏப்.19-இல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
என்னைத் தடுத்த நிறுத்த ஒன்றிணைந்துள்ளதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சியினா் தெரிவிக்கின்றனா். ஆனால் அக்கட்சியினா் அவா்களுக்கு உள்ளேயே சண்டையிட்டுக் கொள்கின்றனா். உண்மையில், அவா்களுக்கு என்னைத் தடுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. நாட்டின் வளா்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதே அவா்களின் நோக்கம்.
எனவே ‘இந்தியா’ கூட்டணி கட்சியினா் என்னை வசைபாடி மிரட்டுகின்றனா். வரும் மக்களவைத் தோ்தல் என்பது புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தோ்தலாகும். அந்தத் தோ்தலில் வெற்றிபெற்று 3-ஆவது முறையாக எனது தலைமையில் அரசு அமையும்போது வரலாற்று முக்கியத்துவம் முடிவுகளை மேற்கொள்ள பொதுமக்கள் வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

காங்கிரஸின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பிரதமா் மோடி

நியாயமான, சுதந்திரமான, அச்சமற்ற தோ்தல்கள்: பிரதமா் மோடி உறுதி!

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு

தொகுதி அறிமுகம்: 'ஆலங்குளம்'-223
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


