திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் ஜேரிவால், அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை வாரத்துக்கு ஐந்தாக அதிகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் இரண்டு முறை அரசு அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை ஐந்து முறை சந்திப்பு நடத்தும் வகையில் அதிகரிக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புது தில்லி அரசில் இருக்கும் பணிப் பளுவுக்கு ஏற்ப, அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை அதிகரிக்க வேண்டும் என்று கேஜரிவால் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், கேஜரிவாலின் இந்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முன்னதாக, பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்புக் கருதி, அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் கூறிவிட்டது. சந்திப்புக்கு மற்றொரு நாள் கொடுப்பதாகவும் தெரிவித்துவிட்டது.
வழக்கமாக சிறை வருகையாளர்கள் வரும் வழியில் வந்து, இரண்டு இரும்புக் கம்பி தடுப்புகள் இடையே இருக்கும் வகையில், பகவந்த் மன், அரவிந்த் கேஜரிவாலை சந்திக்கலாம் என்று கடந்த வாரம் திகார் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.