மும்பை; உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் கணவருக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்குமாறு பணிக்குச் செல்லும் பெண்ணுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக், ஏப்ரல் 2ஆம் தேதி அளித்த உத்தரவில், ஹிந்து திருமண சட்டத்தில் வாழ்க்கைத் துணை என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது கணவன் மற்றும் மனைவி என இரு தரப்பையும் குறிப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹிந்து திருமணச் சட்டத்தின் 24வது பிரிவு, வாழ்க்கைத் துணை என்ற வார்த்தை கணவர் அல்லது மனைவியால், தங்களைப் பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தனது முன்னாள் கணவர் மருத்துவக் கோளாறு காரணமாக வாழ்க்கை நடத்தும் நிலையில் இல்லை என்பதை அந்தப் பெண் மறுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு கணவர், தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள இயலாத நிலையில், வருவாய் ஈட்டும் மனைவி, அவரது பராமரிப்புச் செலவை ஏற்கும் பொறுப்பில் இருக்கிறார் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கணவரின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் கொடுக்குமாறு கடந்த 2020ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பெண் தொடர்ந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்து.
இந்த தம்பதிக்கு விவகாரத்து வழங்கும் போது, மனைவியிடம் ஜீவனாம்சம் கோரி கணவரை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
வங்கி மேலாளராக இருக்கும் தனது மனைவியிடமிருந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு, பணிக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் தனக்கு பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிடக் கோரி கணவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், வீட்டுக் கடன் மற்றும் குழந்தையின் பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகள் இருப்பதால், தன்னால் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, தான் வங்கிப் பணியை ராஜிநாமா செய்துவிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியானால், வேலையின்றி இருக்கும் நிலையில், தனக்கும் தனது குழந்தையின் செலவுகளையும் அந்தப் பெண் எவ்வாறு கவனிக்கிறார் என்பதை நீதிமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், அந்த பெண் தான் சம்பாதிப்பதை மறுக்கவில்லை. அதேவேளையில் வேலை இல்லாமல் இருப்பதைக் காட்ட எந்த ஆவணத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி தேஷ்முக் கூறினார்.
அதேவேளையில், உடல் நலக்குறைவு காரணமாக சம்பாதித்து தன்னை பராமரித்துக்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்று கணவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்தே, ஜீவனாம்சம் வழங்கும் கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.