'கேரளத்தின் உண்மையான கதை..' ரூ.34 கோடி திரட்டப்பட்டது எப்படி?

இதுதான் 'கேரளத்தின் உண்மையான கதை..' கேரளத்துக்கு ஒன்று என்றால், ஒட்டுமொத்த கேரளமும் அங்கு இருக்கும்.
'கேரளத்தின் உண்மையான கதை..' ரூ.34 கோடி திரட்டப்பட்டது எப்படி?
Published on
Updated on
2 min read

கோழிக்கோடு: கேரள மக்கள், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி ஒன்றாக கைகோர்த்து, சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரஹீமைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இதுதான் கேரளத்தின் உண்மையான கதை என்று பல தரப்பிலும் பாராட்டுகளும் குவிகின்றன.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நபரை காப்பாற்றுவதற்காக அந்த மாநில மக்களிடம் இணையவழியில் ரூ.34 கோடி பொது நிதி திரட்டப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கேரளத்தின் உண்மையான கதை..' ரூ.34 கோடி திரட்டப்பட்டது எப்படி?
சவூதியில் மரண தண்டனை: கேரள நபரை காப்பாற்ற ரூ.34 கோடி வழங்கிய மக்கள்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த அப்துல் ரஹீம் என்பவா், சவூதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த அந்நாட்டு சிறுவனை கொலை செய்ததாக கடந்த 18 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். மாற்றுத் திறனாளியான அந்த சிறுவனின் மரணத்துக்கு எதிா்பாராதவிதமாக ரஹீம் காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

அவரை மீட்க வேண்டுமென்றால் ரூ.34 கோடியை திரட்ட வேண்டும். அவரது வயதான தாய், தன்னால் எப்படி ரூ.34 கோடி திரட்ட முடியும் என்று கலங்கி, தனது மகனை எப்படியாவது மீட்க வேண்டும் என்று நாள்தோறும் பிரார்த்தனையை மட்டும் கண்ணீராக முன்வைத்திருந்தார். கடைசியில் அந்த மேஜிக் நடந்துள்ளது. இது ரம்ஜான்- விஷு பரிசாக ரஹீமின் தாய்க்கு கிடைத்துள்ளது. ரஹீம் மீண்டும் பிறந்துவிட்டதாகவே அவரது தாய் கருதுகிறார்.

'கேரளத்தின் உண்மையான கதை..' ரூ.34 கோடி திரட்டப்பட்டது எப்படி?
தமிழகம், கேரளம், கர்நாடகத்துக்கு நல்ல செய்தி! அப்போ சென்னைக்கு?

சிறுவனின் குடும்பத்தினா் ரஹீமை மன்னிக்க முன்வராத காரணத்தால், கடந்த 2018-ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை உறுதியானது.

இதனிடையே, ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்ட சிறுவனின் குடும்பம், தங்களுக்கு இழப்பீடாக ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் 15 மில்லியன் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.34 கோடி) வழங்க வேண்டுமென கோரியது.

ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரஹீம், கடந்த 2006ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு ஒரு குடும்பத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றச் சென்றார். அந்தக் குடும்பத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனையும் பராமரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் ரஹீமின் கை, அந்தச் சிறுவனின் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருந்த டியூப் மீது பட்டு, சிறுவன் மயக்கமடைந்து பிறகு மரணமடைந்தான். இதனால், ரஹீம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ரஹீமை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஒரு குழுவினா், பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் இணையவழியில் பொது நிதி திரட்டும் (கிரெளட் ஃபண்டிங்) முயற்சியை முன்னெடுத்தனா். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி மூலம் ஆயிரணக்கான மக்களிடமிருந்து ரூ.34 கோடி திரட்டப்பட்டுள்ளது. ரஹீம் தாயின் 18 ஆண்டுகால கண்ணீர் தற்போது புன்னகையாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை திரட்டி, தனது மகனைக் காப்பாற்ற முடியும் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், எனது பிரார்த்தனையை மட்டும் கைவிடவில்லை என்கிறார் பாத்திமா.

சில நாள்களுக்கு முன்பு வரை சொற்ப நிதியே திரட்டப்பட்டிருந்ததாகவும், கடந்த 4 நாள்களில் மிகப் பெரிய அளவில் நிதி திரட்டப்பட்டதாகவும் அந்த குழுவினா் தெரிவித்தனா். நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் 6 கோடி வரை திரட்டப்பட்டது. முழுத் தொகையும் கிடைத்ததும், வெள்ளிக்கிழமை 3 மணிக்கு பணம் திரட்டும் பணி நிறுத்தப்பட்டது. சில மசூதிகள், தொழுகைக்கு வரும் நபர்களிடம் பணம் வசூலித்து இந்தக் குழுவிடம் கொடுத்திருக்கிறார்கள்.

மொபைல் செயலி மட்டுமல்லாமல், வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டதாகவும், நிதியளித்த பெரும்பாலான மக்கள் சாதாரண ஏழை மக்கள்தான். தங்களது பின்னணியை எல்லாம் யாரும் நினைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநர் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை பலரும் இந்த செயலுக்கு கைகோர்த்துள்ளனர்.

இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதுதான் கேரளத்தின் உண்மையான கதை என்று முதல்வா் பினராயி விஜயன் பாராட்டியுள்ளாா். மனிதாபிமான நோக்கத்துக்காக கைகோத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

கேரளத்துக்கு ஒன்று என்றால், ஒட்டுமொத்த கேரளமும் அங்கு இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com