இந்தியாவின் பெரும் முதலாளிகளின் கருவியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், இரண்டாவது நாளாக சாலைப் பேரணியில் ஈடுபட்டு அப்பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த பேரணியின் போது மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியது:
“ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் இந்திய அரசியலமைப்பை அழித்து புதிதாக உருவாக்க முயற்சிக்கிறார்கள். காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பை பாதுகாக்க போராடி வருகிறது.
இந்தியாவின் மிகப் பெரும் 5 அல்லது 6 முதலாளிகளின் கருவியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதே அவரின் இலக்காக உள்ளது.
அதனால்தான் கடலுக்கு அடியில் பூஜை நடத்துகிறார். ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவோம் என்றும், நிலவுக்கு மனிதரை அனுப்புவோம் என்று கூறுகிறார். வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பேசுவதில்லை. நாட்டின் பணக்காரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்கிறார்.
நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியை நீங்கள் பார்த்தீர்களா எனத் தெரியவில்லை. அவரது முகத்திலும், கண்களிலும், இந்திய பணக்காரர்களை மிரட்டி ஆயிரக்கணக்கான கோடிகளை பாஜக பெற்ற மிகப்பெரிய ஊழலை மறைக்க முயற்சித்தது தெரிந்தது.”
வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் ஆனி ராஜாவும், பாஜக வேட்பாளராக மாநிலத் தலைவர் சுரேந்தரும் போட்டியிடுகின்றனர்.