கல்லூரியில் குத்திக் கொலை செய்யப்பட்ட தனது மகளும், கொலையாளியும் வெறும் நண்பர்கள்தான் என்றும், காதலர்கள் இல்லை எனவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் ஹிரெமத் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், கொலையாளியின் காதலை மகள் ஏற்காததாலும், தொடர்ந்து துன்புறுத்தினால் காவல்நிலையத்தில் புகாரளிப்பேன் என்று எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரியில் படித்து வந்த நேஹா என்ற 23 வயது மாணவியை, அதேக் கல்லூரியில் படித்து வந்த மூத்த மாணவர் ஃபயாஸ் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் ஃபயாஸை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மாணவியின் தந்தை நிரஞ்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மகள் மிகவும் தைரியமானவர் என்றும், அவர் கல்லூரியில் படிப்பதில்தான் கவனம் செலுத்தி வந்ததாகவும் அவருக்கு கொலையாளியுடன் காதல் எல்லாம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அவர்கள் நண்பர்களாகத்தான் பழகி வந்தனர், காதலர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நட்புடன் பழகி வந்த நிலையில், கொலையாளி காதலிப்பதாகக் கூறியதை, நேஹா மறுத்துவிட்டதாகவும் அந்த ஆத்திரத்தில் அவரை கொலையாளி குத்திக்கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.