ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜார்சுகுமா மாவட்டத்தில் மகாநதி ஆறு உள்ளது. இங்கு அரசிடம் அனுமதி பெற்று ஏராளமான பயணிகள் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 பயணிகள் ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் உள்ள பதர்செனி குடாவில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பும்போது படகு ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நிலைதடுமாறி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் மாயமாகினர்.
இந்த விபத்தையடுத்து ஒடிசா பேரிடர் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹிராகுட் ஆற்றின் நீர்த்தேக்கத்திலிருந்து மேலும் ஐந்து உடல்கள் இன்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
படகு விபத்தில் இறந்தவர்கள் அண்டை மாநிலமான சத்தீஸ்கரின் கர்சேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை படகில் சென்ற 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.