எச்5என்1 எனப்படும் பறவைக் காய்சசல் கோழிகளிடமிருந்து தற்போது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் பரவி வரும் நிலையில், கறந்த பாலிலிருந்து இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், தமிழக - கேரள எல்லைப் பகுதியான வாளையார் உள்ளிட்ட வாகன சோதனைச் சாவடிகளில், கோழி தொடர்பான பொருள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எச்5என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் எப்படி பரவுகிறது என்று ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கரோனா வைரஸைப் போலவே, பல வகையான பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் உள்ளன. முதல் முதலாக பறவைக் காய்ச்சல் வைரஸின் எச்5என்1 வகைதான் மனிதர்களுக்குப் பரவியது. 1997ஆம் ஆண்டு ஹாங் காங்கில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோழிப் பண்ணையில் பராமரிப்புப் பணி செய்பவர்களுக்கு இது பரவியிருந்து, அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பறவைக் காய்ச்சல் பண்ணைக் கோழிகள் மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் எளிதாக பரவுகிறது. இந்த கோழிகள் மூலமாக அதனை வளர்ப்பவர்களுக்கும் நோய் பரவிவிடுகிறது.
ஆனால், பறவைக் காய்ச்சல் பாதித்த கோழியை நல்ல முறையில் சுத்தப்படுத்தி கறியையோ அல்லது முட்டையையோ சமைத்து சாப்பிடும்போதும் பறவைக் காய்ச்சல் பரவுவது இல்லை. அடுப்பில் வைத்து சமைத்துச் சாப்பிடுவதால் கோழிக்கறிகளை சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் இல்லை என்றே விளக்கம் கொடுக்கப்படுகிறது.
அதுபோல, பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அனைத்தும் சாதாரண சளி, காய்ச்சல் அல்லது கரோனா அறிகுறிகளுடன்தான் ஒத்திருக்கின்றன.
அதாவது, இருமல், வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல், தலைவலி, தசை வலி, சளி, தொண்டை வலி போன்றவை இதற்கான அறிகுறிகளாக உள்ளன.