தைவான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு தைவானில் ஹுலியன் நகரில் நேற்று (திங்கள் கிழமை) இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியது.
பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
தைவானில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர்புறம் மற்றும் கிராமங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அன்றைய நாளிலிருந்து இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.