கூகுள் நிறுவனம் பைத்தான் புரோகிராமிங் குழுவை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்துள்ளது.
அதிக ஊதியத்தில் இருப்பதால், பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்துவிட்டு, குறைந்த ஊதிய விகிதத்தில் பணியாளர்களை எடுக்கும் நோக்கத்துக்காக, கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம் கடந்த சில நாள்களாகவே தனது நிறுவனத்தின் ஆள்குறைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் பொறியாளர்கள், ஹார்ட்வேர்ட் குழு, உதவி பொறியாளர்கள் குழுவில் பணிநீக்கம் செய்து வருகிறது.
அந்தவகையில் தற்போது பைத்தான் குழுவில் தலைமை பொறுப்பு முதல் ஊழியர்கள் வரை அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளது. பைத்தான் என்பது நிரலாக்க மொழி (புரோகிராமிங் லேங்குவேஜ்).
கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது முதலே பைத்தான் குழுவினர் கூகுளில் பங்களிப்பு செய்துவந்தனர். தற்போது அந்தக் குழுவில் அனைவரையும் கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியேயிருந்து குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை தேர்வு செய்வதன் முயற்சியாக இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ஊதியத்துடன் ஜெர்மனி ஊழியர்கள் மாற்றப்படவுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவிலுள்ள கூகுள் தலைமையகத்தில் 10 பேருக்கும் குறைவானவர்கள் மட்டுமே பைத்தான் குழுவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை மையமாக வைத்து ஒட்டுமொத்த கூகுளுக்கான பைத்தான் சங்கிலி இயங்குகிறது. ஆயிரக்கணக்கான மூன்றாம் தர ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இப்பணிகள் நடைபெற்று வந்தன.
கூகுள் பைத்தான் குழுவில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக கூகுளுக்கு அளப்பறிய சேவையை வழங்கினோம். ஆனால், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்தது ஏற்புடையதாக இல்லை எனப் பதிவிட்டுள்ளார்.