மதத்தின் பெயரால் வாக்கு கேட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதாகவும், உத்தரபிரதேசத்தில் இந்து தெய்வங்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள், சீக்கிய தெய்வங்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வாக்கு சேகரித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் ஆனந்த் எஸ். ஜோந்தலே ஏப்ரல் 15 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
எந்தவொரு கட்சியும் வேட்பாளரும் தற்போதுள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை ஏற்படுத்தும் அல்லது வெவ்வேறு சாதிகள் அல்லது சமூகங்கள், மத அல்லது மொழியியல் ஆகியவற்றுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்று விதி கூறுகிறது.
"வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது சமூக உணர்வுகளுக்கு எந்த வேண்டுகோளும் விடுக்கக் கூடாது என்று அது மேலும் கூறுகிறது. மசூதி, தேவாலயங்கள், கோயில்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்கள் தேர்தல் பிரசாரத்திற்கான மன்றமாக பயன்படுத்தப்படக்கூடாது," என்று ஜோந்தலே தெரிவித்திருந்தார்.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு வெள்ளிக்கிழமை(ஏப்.26) விசாரணைக்கு வருவதாக பட்டியலிடப்பட்டு பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி தத்தா, "குறிப்பிட்ட முறையில் செயல்பட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்பதால், இந்த மனு முற்றிலும் தவறானது” எனக் கூறி தள்ளுபடி செய்தார்.