ஃபரூக்காபாத், ஏப். 30: உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் "இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக "வாக்கு ஜிஹாத்' நடத்தி அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சமாஜவாதி கட்சிப் பிரமுகரான மரியா ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மரியா ஆலம், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் உறவினராவார். ஃபரூக்காபாத் தொகுதியில் போட்டியிடும் "இந்தியா' கூட்டணி வேட்பாளர் நவல் கிஷோர் சாக்கியாவை ஆதரித்து சல்மான் குர்ஷித் முன்னிலையில் கைம்கஞ்ச் பகுதியில் மரியா ஆலம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
நாம் அனைவரும் சேர்ந்து "வாக்கு ஜிஹாத்' நடத்த வேண்டும். இந்த சங்க பரிவார (ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள்) மத்திய அரசை தூக்கியெறிய நாம் வாக்கு ஜிஹாத் நடத்த வேண்டியுள்ளது. பாஜக அரசைத் தூக்கியெறிய சிறுபான்மை சமூகம் இதைச் செய்வது அவசியமாகும். இது கைகோப்பதற்கான நேரம். இல்லாவிட்டால் இந்த சங்க பரிவார மத்திய அரசு நமது இருப்பைத் துடைத்தெறிந்து விடும்.
அரசியல் சாசனமும் ஜனநாயகமும் ஆபத்தில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், மனிதாபிமானம் ஆபத்தில் இருப்பதாக நான் கூறுகிறேன். நாட்டையும் அதன் பன்முகக் கலாசாரத்தையும் காக்க வேண்டுமானால் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
மரியா ஆலமின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக சல்மான் குர்ஷித்திடம் கருத்து கேட்டபோது "ஜிஹாத் என்பது ஒரு சூழ்நிலைக்கு எதிராகப் போராடுவதாகும். பொதுவாக நான் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து விடுவேன். ஏனெனில் அதன் அர்த்தம் திரிக்கப்பட்டுவிடும். அரசியல் சாசனத்தைக் காக்க வாக்கு ஜிஹாத் நடத்த வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் மரியா ஆலம் பேசியுள்ளார்.
ஃபரூக்காபாத் தொகுதியில் நான் போட்டியிடுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இம்முறை என்னை அலிகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுமாறு கூறினார்கள். அதை நான் பணிவுடன் மறுத்துவிட்டேன்' என்று தெரிவித்தார்.