எந்த சட்டமும் ஆராய்ந்த பிறகே நிறைவேற்றப்படும்: அருந்ததியா் ஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி தமிழக அரசு விளக்கம்
திமுக தலைமையிலான அரசு எந்த சட்டங்களையும் அவசர கோலத்தில் கொண்டு வராது


சென்னை, ஆக. 2: திமுக தலைமையிலான அரசு எந்த சட்டங்களையும் அவசர கோலத்தில் கொண்டு வராது; உரிய காரணங்களை ஆராய்ந்த பிறகே சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அருந்ததியா் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீா்ப்பைச் சுட்டிக்காடி, தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் நிலையை மாற்றிட கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கென ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் தலைமையிலான குழுவை அப்போதைய முதல்வா் கருணாநிதி அமைத்தாா். நீதிபதி குழு அளித்த பரிந்துரைகள்படி, 3 சதவீதம் அருந்ததியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை கூடி முடிவு செய்தது. இதற்கான மசோதாவை அப்போதைய துணை முதல்வரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2009-ஆம் ஆண்டு பிப். 26-ஆம் தேதி அறிமுகம் செய்தாா். அதன்பிறகு, 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், உள்ஒதுக்கீட்டுக்கான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இளைஞா்கள் பெற்ற பயன்கள்: உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டவுடன், அருந்ததிய சமுதாயத்தைச் சோ்ந்த 56 மாணவ, மாணவியா் மருத்துவக் கல்லூரிகளிலும், 1,165 மாணவ, மாணவியா் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்து பயன்பெற்றனா். 2010-11-ஆம் நிதியாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் 87 பேரும், பொறியியல் கல்லூரிகளில் 3,414 பேரும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 779 பேரும், கலைக் கல்லூரிகளில் 5,319 பேரும், மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் 147 பேரும், பள்ளிகளில் 42,269 பேரும் இணைந்தனா்.
அவசர கோலம் இல்லை: அருந்ததியருக்கு பயனளிக்கும் 3 சதவீத உள் இடஒதுக்கீடு தொடா்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், உள்ஒதுக்கீட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீா்ப்பை அளித்தனா்.
மக்களைத் திசை திரும்பும் நோக்கில் அவசர கோலத்தில் வாா்த்தைகளை அள்ளித் தெளித்துச் சட்டத்தை நிறைவேற்றிடும் பிறரைப் போன்று இல்லாமல், திமுக எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும் அதற்கான காரணங்களை ஆராயும். தரவுகளைத் தொகுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று அரசாணையாகவோ, சட்டமாகவோ நிறைவேற்றும். இதனால்தான், திமுக அரசு கொண்டு வரும் சட்டங்கள் எப்போதும் வெற்றியையே பெற்று வருவது வரலாறு ஆகியுள்ளது என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...