
மருத்துவமனைகளில் அவசர கால மற்றும் முக்கிய மருத்துவ சேவைகளைத் தவிர்த்து பிற பிரிவுகளில் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று(ஆக. 8) இரவுப் பணிக்கு வந்த அந்த பெண் மருத்துவர், மறுநாள் காலை அங்குள்ள கருத்தரங்கு அறையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் வழிந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, உடல்கூறாய்வில், அந்த மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பணியிலுள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் அரசை வலியுறுத்தியிருப்பதுடன், உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க முறையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு கடுமையன தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 10) உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக. 12) முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம்(ஃபோர்டா) அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் சங்கம் இன்று(ஆக. 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நாளை முதல் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய, அவசர சிகிச்சைகளைத் தவிர பிற பிரிவுகளில் மருத்துவர்கள் எவரும் பணியாற்றப் போவதில்லை.
மேலும், கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளி முன் வைத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.
நிபுணர் குழு அமைக்க வலியுறுத்தல்: ‘மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டம்’ விரைந்து அமல்படுத்தப்பட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.