
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மருத்துவா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மருத்துவ சேவைகளை திங்கள்கிழமை நிறுத்துவதற்கு இந்திய உறைவிட மருத்துவா்கள் சங்க சம்மேளனம் (எஃப்ஓஆா்டிஏ) அழைப்பு விடுத்து திங்கள்கிழமை(ஆக. 12) போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக, அனைத்து இந்திய மருத்துவ சங்க சம்மேளன(எஃப்ஏஐஎம்ஏ) மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திங்கள்கிழமை(ஆக. 12) தெரிவித்துள்ளனர்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை(ஆக. 13) முதல், உறைவிட மருத்துவா்கள் சங்கத்துக்கு ஆதரவாக அத்தியாவசிய, அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர பிற மருத்துவ சேவைகளை மருத்துவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களும் செவ்வாய்க்கிழமை(ஆக. 13) முதல் கலந்துகொள்ளவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் நடந்தது என்ன?
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி காா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவா் ஒருவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று(ஆக. 8) இரவுப் பணிக்கு வந்த அந்த பெண் மருத்துவர், மறுநாள் காலை அங்கு 3-வது மாடியில் அமைந்துள்ள கருத்தரங்கு அறையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் வழிந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, உடல்கூறாய்வில், அந்த மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பணியிலுள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் அரசை வலியுறுத்தியிருப்பதுடன், உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு நீதி கிடைக்க முறையாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு கடுமையன தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 10) உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.