கிருஷ்ணர் வாழ்க்கை குறித்து விவாதிக்க மையங்கள் திறக்கப்படும்: ம.பி. முதல்வர் அறிவிப்பு!
கிருஷ்ணரின் வாழ்க்கை குறித்த விவாதங்களுக்கு நகர்ப்புறங்களில் மையங்கள் ஏற்படுத்தப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஜன்மாஷ்டமி விழாவில் கடவுள் கிருஷ்ணர் குறித்த கருத்தரங்கு கீதா பவனில் நடைபெற்றது. கீதா பவன் தன்னார்வ அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் நிறுவனம். இங்கு பல்வேறு மத நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இங்கு நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் மோகன் யாதவ், “இந்தூரில் உள்ள கீதா பவன் பகவான் கிருஷ்ணர் குறித்த பல்வேறு உரையாடல்களுக்கு ஒரு பெரிய மையமாகத் திகழ்கிறது.
கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும் கீதா பவனைப் போல பல மையங்களை நகர்ப்புறங்களில் எங்களின் அரசு திறக்கும் என அறிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்
ஜன்மாஷ்டமி என்னும் பெயரில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளை (ஆகஸ்ட் 26) கொண்டாடப்பட இருக்கிறது.
முதல்வர் அறிவித்த இந்த மையங்களுக்கு நகர்ப்புற அமைப்புகள் மூலம் மாநில அரசு நிதி வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் புராணங்கள் குறித்த அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இடமாக இருக்குமென்றும் முதல்வர் தெரிவித்தார்.