போலி நோயாளிகளைக் கண்டறிவது எப்படி? தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்

போலி நோயாளிகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்
மருத்துவமனை - கோப்புப்படம்
மருத்துவமனை - கோப்புப்படம்Center-Center-Chennai
Updated on
1 min read

புது தில்லி: மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கும் முன் நடக்கும் ஆய்வுகளின்போது, போலி நோயாளிகள் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள், தாங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போதிய வசதி இருக்கிறது என்பதை காட்டி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்கும்போது, அதன் மருத்துவமனைகளில் போலியாக நோயாளிகளை அமர்த்தி படுக்கைகளை நிரப்புவது உண்டு.

அவ்வாறு நிகழும் மோசடிகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் முதல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

சில மருத்துவக் கல்லூரிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது போலியான நோயாளிகள் அதாவது மருத்துவ சிகிச்சை தேவைப்படாதவர்கள் படுக்கையை நிரப்புவதற்காக வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைப்படி, ஒரு மருத்துவமனையில் திடீரென ஒரே நாளில் அல்லது ஆய்வுக்கு ஒரு நாள் முன்பு அதிகம் பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனரா?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரா?

அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அனுமதித்து சிகிச்சை வழங்கும் அளவுக்கு நோய் தீவிரம் இல்லாமல் இருப்பது போன்றவை போலி நோயாளிகளைக் கண்டறிவதற்கான வழிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த ஒரு நோயாளியிடம் நோய்க் கண்டறிவதற்கான எந்த பரிசோதனை முடிவுகளும் அதாவது எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை முடிவுகள் இல்லையோ?

யாருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படாமல் இருக்கிறதோ, திடீரென சிலருக்கு முதல் நாளிலிருந்து மாத்திரைக்கான ரசீதுகள் வழங்கப்பட்டிருக்கும் அவர்களும் போலி நோயாளிகள் எனக் கண்டறியலாம்.

குழந்தைகளுக்கான பிரிவில் சில வேளைகளில் குழந்தைகள் எந்த நோயும் இல்லாமல் சாதாரணமாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் அந்த மருத்துவமனையே முகாம் நடத்தி அங்கிருந்து நேரடியாக பரிசோதனை என்ற பெயரில் ஆள்களைக் கொண்டு வந்திருக்கும் என்பதையும் அறிய வேண்டும்.

எனவே, அடுத்த கல்வியாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெற ஆய்வுக்குச் செல்லும்போது இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், ஒரே நாளில் ஆய்வு செய்யாமல், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நாள்களில் ஆய்வுகள் நடத்தும்போது உண்மை நிலவரத்தை அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com