
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது அண்மைக் காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கிருக்கும் சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக கருதுகின்றனர். சர்வதேச அளவில் இந்த பிரச்சினை பேசுபொருளாகி உள்ளது.
இந்த நிலையில், அண்டை நாட்டிலுள்ள ஹிந்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் அவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரியும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இன்று(டிச. 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டு இடைக்கால அரசிடம் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விவாதத்தில் திங்கள்கிழமை பங்கேற்க வருகை தந்திருந்த வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி தன்னுடன் ‘பாலஸ்தீன ஆதரவு வாசகம் மற்றும் படம்’ இருக்கும் பையைக் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இஸ்ரேல் ராணுவம் காஸாவில் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பிரியங்கா காந்தி பாலஸ்தீன ஆதரவு வாசகம் வரைந்த கைப்பையைக் கொண்டு வந்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி வங்கதேசத்திலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக வங்கதேச ஹிந்துக்கள் ஆதரவு வாசகத்தை அடங்கிய கைப்பையைக் கொண்டு வந்திருந்தது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.