நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் பிப்.8ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், புயல் வெள்ள நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பிப். 8-ஆம் தேதியில் காலை 10 மணிக்கு திமுக மற்றும் தோழமை எம்.பி.க்கள் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டும் என டி.ஆர். பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.