மத்தியப் பிரதேசத்தில் புகையிலை பயன்படுத்துவதை கண்டித்ததற்காக, தனது சொந்த அண்ணி மற்றும் 5 வயது அண்ணன் மகனை கோடாரியால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சாஹ்தோல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்லா கோல்(30 வயது). புகையிலை பயன்படுத்தும் பழக்கமுடையவரான இவர், சம்பவத்தன்று தனது அண்ணி சுக்கி பாய்யிடம் புகையிலை தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் புகையிலை பயன்படுத்துவதை அவரது அண்ணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த ராம்லா கோல் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் நேற்று(பிப்.3) நள்ளிரவில் வீடு திரும்பிய அவர், அவரது அண்ணி மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரையும் கோடாரியால் வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.அதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சுக்கி பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய ராம்லா கோலை தேடி வந்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.