அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செவ்வாய்கிழமையன்று அருணாச்சல முதல்வர் பெமா காண்டு சென்றுள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பின் எழுப்பப்பட்டுள்ள இந்த கோயில் ஒரு பெருமைக்குரிய விஷயம் என அவர் தெரிவித்தார்.
மகரிஷி வால்மீகி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர், 'அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 70 பேர் ராமர் கோயிலுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.
'ராமர் கோயிலில் மரியாதை செலுத்த நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். இரண்டு வருடங்களுக்குமுன் கட்டிட வேலைகள் நடக்கும்போது இங்கு வந்திருக்கிறேன். பல சிக்கல்களைச் சந்தித்து 500 வருடங்களுக்குப்பின் எழுப்பப்பட்ட இந்தக் கோயில் ஒரு பெருமைக்குரிய விஷயம்' என அவர் கூறினார்.
மேலும் 'புதிய கோயில் உருவாகிவிட்டது. ராம் ராஜியம் வந்துவிட்டது' எனவும் அவர் தெரிவித்தார்.