திருவனந்தபுரம் : இணையவழி குற்றங்களை தடுப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
கேரள காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையவழி குற்றத் தடுப்புப்பிரிவு மற்றும் புதிய காவல் கட்டிடங்களைத் திறந்து வைத்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது,
நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் தாக்கம் கேரளத்தில் அதிகரித்துள்ளது. அதேவேளையில், மோசடிகளும், குற்றங்களும் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது. கேரளத்தில் இணையவழி குற்றச்செயல்கள் மூலம் நடைபெற்ற மோசடியால் ரூ.201 கோடி தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களில் உள்ள ஒட்டைகளை தவறாகப் பயன்படுத்தி, மோசடி நபர்கள் இதுபோன்ற குற்றங்களை செய்து வருகின்றனர்.
இணையவழி குற்றங்களால், அதிகளவில் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. இணையவழி மோசடி நபர்களிடமிருந்து தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இல்லை.
இணையவழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளிக்க முன்வர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்காதபடி, குற்றங்களை சரிசெய்யும் நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.