
காங்கிரஸில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் பாஜகவில் இணைந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
66 வயதாகும் அசோக் சவானுக்கு மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மும்பை முதல்வர் ஆஷிஷ் ஷெலர் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பாஜக தலைமையகத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவரது சொந்த ஊரான நாந்தேட்டில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டத்திற்கு மத்தியில் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சவான் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர்க்கப்பட்டார்.
இவர், கடந்த 2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராகப் பதவி வகித்தார்.
கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவா்ண்,
இனி பாஜகவுடன் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவேன்.
காங்கிரஸ் கட்சிக்கு நான் நேர்மையாக இருந்தேன். இனி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மாநிலங்களவை தேர்தலாக இருந்தாலும் சரி வெற்றி வாய்ப்பு இருக்கும் கட்சியாக பாஜக மாறியுள்ளது. நான் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்ததையடுத்து கட்சிக்கு எதிராகவோ, தவறாகவோ பேச விரும்பவில்லை.
பட்னாவிஸ் எப்போதும் எனது தொகுதிக்கு உதவியாக இருந்துள்ளார். அரசியல் எதிரிகளை மட்டும் குறிவைத்துத் தாக்குவது அரசியல் இல்லை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும். பாஜகவில் இணையச் சொல்லி என்னை யாரும் வற்புறுத்தவில்லை, இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான் என்று அவர் கூறினார்.
பாஜக சார்பில் மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவைக்கு அசோக் சவாண் போட்டியிடுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.