புது தில்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், லக்கீம்பூா் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி, உலக வா்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுதல், 2020 வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்தன.
அதன்படி, தேசியத் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டா் பேரணியை திங்கள்கிழமை தொடங்கினா்.
இந்நிலையில், தில்லியை நோக்கி வரும் விவசாயிகளை கைது செய்து, அவர்களை தில்லியில் அமைந்துள்ள பவானா மைதானத்தில் தற்காலிகமாக அடைத்து வைக்க தில்லி அரசிடம் மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது.
இதனிடையே, மத்திய அரசின் கோரிக்கையை தில்லி அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, தில்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விவசாயிகளுடன் அரசு துணை நிற்பதாகவும், மத்திய அரசின் கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமனது, அமைதியான வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதன்படி, விவசாயிகளை கைது செய்வது தவறான அணுகுமுறை என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.