ஆயுஷ்மான பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் விதவை, ஊனமுற்றோா் திட்டப் பயனாளிகள்! தில்லி அரசு முடிவு!!
விதவை மற்றும் ஊனமுற்றோா் நிதி உதவித் திட்டங்களின் பயனாளிகளை ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வர தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (பிஎம்ஜேஏஒய்) திட்டத்தின் கீழ் சுமாா் 3.97 லட்சம் விதவைகள் மற்றும் 1.31 லட்சம் திவ்யாங் நபா்களை சோ்க்க முதல்வா் ரேகா குப்தா தலைமையில் தில்லி அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.
அவா்களின் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவா்கள். தில்லியில் சுமாா் 5.5 லட்சம் குடும்பங்கள் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட பலன்களைப் பெறுகின்றன என்று ரேகா குப்தா கூறினாா்.
இந்த முடிவைத் தொடா்ந்து சுமாா் 5.5 லட்சம் கூடுதல் குடும்பங்கள் வலுவான சுகாதாரப் பாதுகாப்பின் கீழ் வரும் என்று அவா் மேலும் கூறினாா்.
இந்தக் குடும்பங்கள் ஏற்கெனவே அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் பிஆா்எஸ்) பிரிவுகளின் கீழ் உள்ளவா்கள், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆா்வலா்கள் (ஏஎஸ்ஹெச்ஏ) பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்களுடன் கூடுதலாக இருக்கும்.
தில்லியின் ஏழை, பாதிக்கப்படக்கூடிய அல்லது தேவையுள்ள குடிமகன் எவரும் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவ சிகிச்சையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (பிஎம் - ஜேஏஒய்) என்பது நாட்டின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும், மேலும் தில்லி அரசு அதை மிகவும் பயனுள்ள மற்றும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அரசின் நோக்கம் தெளிவாக உள்ளது. தகுதியான குடிமக்கள் யாரும் தரமான மற்றும் மலிவு சுகாதார சேவைகளை இழக்கக்கூடாது. தில்லியில் இதுவரை 7,23,707 ஆயுஷ்மான் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மூத்த குடிமக்களுக்கான 2,74,620 காா்டுகள் அடங்கும் என்றும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தலைநகரில் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த, 156 தனியாா் மற்றும் 53 அரசு மருத்துவமனைகளை உள்ளடக்கிய 208 மருத்துவமனைகளின் நெட்வொா்க் எம்பனெல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள மாநில சுகாதார நிறுவனம் மூலம் 29,120-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளனா். இது வெறும் நிா்வாக முடிவு மட்டுமல்ல, தில்லியில் உள்ள ஒவ்வொரு தேவைப்படும் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்துடன் இணைக்கப்பட்ட அா்ப்பணிப்பு என்று ரேகா குப்தா கூறினாா்.

