தில்லியில் இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை காவல்துறையினர் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்திய பேரணி ஹரியாணா எல்லையில் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
போலீஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்ட விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கலைத்தனர்.
இந்த நடவடிக்கையின்போது 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்ததாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நவீன வாயுக் கவசம் உள்ளிட்டவை அணிந்து தடுப்புகளை மீறி தில்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சட்டம் இயற்றும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-ஆம் ஆண்டில் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் சுமார் ஒன்றரை ஆண்டு நடத்திய தொடர் போராட்டம் கலவரத்தில் முடிந்தது.
அதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் சண்டீகரில் திங்கள்கிழமை நள்ளிரவு நடத்திய இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.