மறைந்த வேளாண் விஞ்ஞானிக்கு நாட்டின் உயரிய ’பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.
இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததை கொண்டாடும் விதமாக பிகாரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் விழா ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா சுவாமிநாதன், “எங்கள் விவசாயிகளை குற்றவாளிகள் போல் நடத்தாதீர்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும், மதுரா சுவாமிநாதன் பேசியது:
“பஞ்சாப் விவசாயிகள் இன்று தில்லியை நோக்கிச் சென்று கொண்டுள்ளனர். அவர்களை தடுப்பதற்காக ஹரியாணா உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நமது விவசாயிகள், குற்றவாளிகள் அல்ல.
நமக்கு சாப்பாடு வழங்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
எதிர்காலத்துக்காக நாம் எந்தவிதமான உக்திகளை வகுக்கிறோமோ, அதனுடன் நம்முடைய விவசாயிகளையும் ஒன்றுசேர்த்து அழைத்துச்செல்வதே, எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நாம் அளிக்கும் உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.
வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீஸின் தடையை மீறி தில்லியை நோக்கி இரண்டாவது நாளாக பஞ்சாப் விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.