வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும்.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குஜராத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவாணும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவாண், காங்கிரஸில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மத்திய பிரதேச மாநிலங்களவை வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், ஒடிஸா மாநில வேட்பாளராக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்வும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.