ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஷிபு சோரனின் இளைய மகனுடன் 7 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
ஜாா்க்கண்ட் முதல்வராக இருந்த ஜேஎம்எம் கட்சியின் தலைவா் ஹேமந்த் சோரன், நிலமோசடி தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டாா். அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதல்வராக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பயி சோரன் கடந்த 2ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவா் ஆலம்கீா் ஆலம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) மூத்த தலைவா் சத்யானந்த் போக்தா ஆகியோா் அமைச்சர்களாக பதவியேற்றனா். இந்த நிலையில் ஜார்க்கண்ட் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஷிபு சோரனின் இளைய மகன் பசந்த் சோரனுடன் 7 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
ராஞ்சியிலுள்ள ஆளுநா் மாளிகையின் தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். கூட்டணியில் காங்கிரஸ், ஆா்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இத்துடன் 12 பேர் கொண்ட அமைச்சரவையில் பசந்த் சோரன் உள்பட இருவர் புது முகங்கள் ஆவர். துறைகள் ஒதுக்கப்பட்ட பிறகு ஜார்க்கண்ட் வளர்ச்சிக்கான பணிகளை அமைச்சர்கள் முன்னெடுப்பர் என்று முதல்வர் சம்பயி சோரன் தெரிவித்துள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பசந்த், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.